நவீன உலகில் எல்லா செயற்பாடுகளையும் மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கும் கருத்தாழமிக்க ஒரு கர்த்தாவாக செயற்படும் இந்த காலநிலையானது கட்டுக்கட்டான காரணங்களால் காலத்தையே மாற்றிக் கொண்டு இருக்கிறது.
காலநிலை மாற்றம் என்பது பல தசாப்தங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் வெப்பமான, ஈரப்பதமான அல்லது வரண்ட நிலமைகளான சராசரி வானிலை நிலைமைகளின் குறிப்பிடத்தக்க மாறுபாடு என்று இயற்கை வளங்கள் பாதுகாப்பு சபையினால் 20 மார்ச் 2021 ஆம் ஆண்டு வெளியான climate change explained எனும் கட்டுரையிலிருந்து விளக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலரும், பிரபல நடிகருமான மார்க் ருபெலோ என்பவரின் கருத்துப்படி இந்த கிரகத்தில் நாம் வாழும் குறுகிய வரலாற்றுக்காலத்தில் காலநிலை மாற்றமானது நம் இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். மேலும் இதன் விளைவுகளிலிருந்து எவரும் தனித்துச் செல்ல முடியாது என காலநிலை மாற்றம் தொடர்பாக இலகுவான முறையில் பாரிய தொர் தெளிவை ஏற்படுத்தியுள்ளார்.
ஐ.நா சபையின் நிலைபேண் அபிவிருத்தித்திட்டத்தின் இலக்குகளில் 13வது காலநிலை நடவடிக்கை தொடர்பானது ஆகும்.,.(13 climate action) 13 காலநிலை நடவடிக்கை எனும் இலக்கினூடாக வெளிப்படுத்தப்பட்டது.என்னவெனில் காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகளுக்கு உடனடியாக நடவடிக்கைகளை/ தீர்வுகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.
பௌதீக காரணிகள் காலநிலை மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தினாலும் அவையும் மானிடரின் தாக்கத்தினாலேயே அதன் செல்வாக்கு தங்கியுள்ளது. மேலும் காலநிலை மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் பசுமைக்குடில் செயற்பாடுகள் முறையற்ற நிலப்பயன்பாடு இரசாயன சேர்வைகள் காடழித்தல் குளோரோ புளோரோ காபன் (CfC) இன் தாக்கம் போன்ற மனிதனின் செயற்பாடுகளால் இன்று காலநிலை மாற்றம் அடைந்துள்ளது. இவ்வாறான காரணிகளால் மாற்றம் அடையும் காலநிலையை நிலையான தன்மையில் பேண இளைஞர்களாக இருக்கும் எம்மால் என்ன செய்ய முடியும்? நாம் இன்று சரியான நடவடிக்கைகளை முறையாகப் பேணி முன்னெடுத்தாலே எதிர்கால சமூகத்தினருக்கு எல்லா வளங்களையும் அனுபவிக்க கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
அதாவது சுமார் தென் ஆசியாவிலும் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளில் மாத்திரம் 12% வாயுக்களை வளியில் சேர்க்கின்றன. இதற்கு இளைஞர்களாகிய நாம் எந்த பச்சைவீட்டு வாயு வளியில் வந்து சேர்கிறது என்பதை தொழில்நுட்ப சக்தியின் ஊடாக கண்டறிந்து அதற்கு மாற்று வழிகளை பிரயோகிப்பதோடு இரசாயன வாயுக்களை கண்டறியும் உபகரணங்களின் ஊடாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய வாயுக்களை கண்டறிந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் ஊடாகவும் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தலாம்.
இது மாத்திரமன்றி திண்மக்கழிவு முகாமைத்துவத்தைப்பேணி அதற்கென்ற சட்ட திட்டங்களை உருவாக்கி வரையறைகளையும் உருவாக்கி மீறினால் எடுக்கும் தண்டனைகள் குறித்தும் சட்டம் இயற்றுபவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் தெளிவுகளையும் வழங்குவதனூடகவும் 3R எனும் கோட்பாட்டிற்கேற்ப (reduce) குறைத்தல் (reuse) மீள் பயன்படுத்தல்(recycle) மீள்சுழற்சி ஆகிய செயற்பாடுகளை சரியான முறையில் எடுத்து நடத்துவதன் மூலமும் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை கணிசமானளவு ஊக்குவிக்கலாம்.
மேலும் போக்குவரத்துத் துறையும் வாகனங்களும் காலநிலையில் காலமெல்லாம் தாக்கம் செலுத்தி வருகின்றது. அதாவது சொந்த தொழில் சொந்த வாகனம் என்ற கோட்பாட்டில் கோட்டை கட்டி வாழும் புதுவிதமான உலகிலேயே இன்று நாம் இருக்கின்றோம். எனினும் இந்த சுய போக்குவரத்து எண்ணிலடங்கா மாற்றங்களை காலநிலையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது எனவே பொதுப் போக்குவரத்தின் அவசிய தன்மையையும் நன்மைகளையும் இளைஞர்களாகிய நாம் உலகுக்கு எடுத்துக்காட்டி காலநிலை நிலைமைகளை முறையாய் அனுபவித்திட வழி அமைப்போம்.
இது மாத்திரமின்றி விவசாயம் எனும் மண்ணையும் நீரையும் நம்பி செய்யும் தெய்வ தொழில் என்று பேணப்பட்டு வந்த விவசாயமானது இன்று இரசாயனத்தை நம்பி இயற்கையை மறந்து செய்யப்படுகின்றது. இளைஞர்களாகிய நாம் இந்நிலைமையை மாற்றி இயற்கையை பாதுகாக்க இயற்கை முறைகளைக் கைக்கொள்ள செய்து இலாபம் ஈட்டும் இதர வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவும் இதுதொடர்பான அமைப்புகள் சங்கங்கள் என்பவற்றை அமைப்பதன் ஊடாகவும் காலநிலை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மேலும் மாநாடுகள், அமைப்புகள் பலவற்றை இளைஞர்கள் உருவாக்கி அவற்றை சீரான இலக்குகளுடனும் தெளிவான செயற்பாட்டு கோள்களினூடாகவும் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்காக கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை செய்ய முடிவதோடு துறைசார் நிபுணர்களை அமைப்புகளில் ஈடுபடச் செய்து முறையான செயற்பாடுகளையும் முன்னெடுக்க உதவும் .
இது தவிர இன்று நிகழ்நிலை (online) உலகில் மனிதனின் அத்தனை செயற்பாடுகளும் நிகழ்நிலையின் ஊடாக செய்யப்பட்டுக் கொண்டு வருகின்ற காலத்தில் நிகழ்நிலையில் கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் என்பவற்றை நிகழ்த்துவதனூடாகவும் காலநிலை மாற்றம் தொடர்பான காரணிகளை கண்டறிந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மேலும் பொது மக்களிடையே சமூக வலைத்தளங்களினூடாக துணுக்குகள், சிறுகுறிப்புகள் கேலிச்சித்திரங்கள், அறிவூட்டல் ஆக்கங்கள் என்பவற்றின் மூலமும் இளைஞர்கள் ஆகிய எமக்கு எண்ணிலடங்கா நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு இன்றைய இவ்வையகத்தின் இளைஞர்களாக திகழும் நாம் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இவ்வுலகை காத்திட காலநிலை மாற்றம் எனும் கடுகதியான இயக்கத்தை குறைத்திட கரிசனையோடு கைகோர்த்திடுவோம்
admin
Oct 13, 2021
0