இன்றைய காலகட்டத்தில் வன்முறை என்பது அதிகனத்த ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. வன்முறை என்பது ஒருவர் மீது ஏதொவதொரு காரணத்தினால் அவர் மீது ஏற்படுத்திக்கொள்ளும் தாக்குதலாகும். மனிதனானவன் தனது அதிகாரத்தையும்,ஆளுமையையும் பயன்படுத்தி தன்னை சார்ந்த மக்களையும் தன்னைச் சாரந்த நபர்களையும் தனது ஆளுமைக்குள் உட்படுத்துகின்ற போது அதனையே நாம் வன்முறை என்று குறிப்பிடுகின்றோம். வன்முறை என்பது வெறும் உடற்தாக்கமல்ல. அது உடல், உள, சமூக, பாலியல் ரீதியாக இடம் பெறலாம். ஆதிக்க உணர்வுகளில் மிகையான செல்வாக்கினால் இவ்வாறான வன்முறைகள் அதிகமாக இடம்பெறுகின்றன. வன்முறை வீட்டு வன்முறை, பாலியல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் அதிகம் பெண்களே. பெண்கள் ஆண்களால் மட்டும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதில்லை. பெண்களால் கூட பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் போராட்டம், யுத்தம், ஆயுத முரண்பாடு போன்றவற்றினால் வன்முறை இடம்பெறுகின்றது. இதனை விட குடும்ப அங்கத்தவரிடையேயான வன்முறையை, குடும்ப வன்முறை என அழைக்க முடியும்.
வன்முறையானது நிகழ்கின்ற பட்சத்தில் அதன் விளைவு, தாக்கங்கள் அதிகமாகக் குடும்பத்திற்குள்ளும் அதன் வெளியிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாக இந்த வன்முறை அமைகின்றது. கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகளுக்கிடையிலான தகராறுகள் பாரிய வன்முறைக்கும் கொலைச் சம்பவங்களுக்கும் வித்திடுகின்றது. வீட்டு அங்கத்தவர்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்படும் போது குறித்த நபர்கள் அதனை வன்முறைகளாகவும் தகாத செயல்கள் மூலமாகவும்
தமது குடும்ப அங்கத்தவர்களிடம் பிரயோகிக்கின்ற போது அதனை ‘வீட்டு வன்முறை’ என்கின்றோம்.
வறுமை, மன அழுத்தம், பண்பாட்டு சமூகக் காரணிகள், சமூக புறமொதுக்குதல்கள் காரணமாகவும் அத்தியவசியமான சில விடயங்கள் கிடைக்கப்பெறாத பட்சத்திலும் பொருளாதார சொத்துடமை போன்றன கிடைக்கப் பெறாத பட்சத்தில் வன்முறை ஏற்படுகின்றது. மனைவியை அடிப்பது, மாமியார் கொடுமை, பலாத்காரம், கட்டாய உடலுறவு, பாலியல் துன்புறுத்தல்கள் கற்பழிப்பு போன்றன அடிப்படை வன்முறைகளாகின்றன. 6 நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகின்றாள். இதில் 5 சதவீதமானோரே சட்ட நடவடிக்கையினை நாடுகின்றார்கள். பப்புவா நியூகினியில் 67.7 வீதமான கிராமப்புறப் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகின்றனர். கனடாவில் 4 பேருக்கு ஒரு பெண் வன்முறையை அனுபவிக்கின்றாள். தாய்லாந்தில் இருந்து 10 000 பேர் விபச்சாரத்திற்காக கடத்தப்படுகின்றனர். ஆபிரிக்காவில் பல பெண்கள் பிறப்புறுப்பு சிதைக்கும் சடங்குகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில் வரதட்சனை கொடுமையாலும் மாமியார் கொடுமையாலும் அதிகமான மரணங்கள் இடம் பெறுகின்றன. கென்யாவில் 42 சதவீதமான பெண்கள் கணவனின் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இன்றைய காலகட்டங்களில் பெருமளவான பெண்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதனைக் காணலாம். இவர்கள் தொழில்பெற்றுச் செல்கின்ற நாடுகளில் உள்ள குடும்பங்களில் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அவர்கள் அவ் வீட்டு வன்முறையின் காரணமாக உயிரிழக்கின்ற நிலை கூட ஏற்படுகின்றது. பொதுவாக உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் அவர்கள் துன்பப்படுவதனைக் காணலாம். அவர்கள் தாம் பணிப்புரிகின்ற வீடுகளில் வன்முறைக்குள்ளாகின்ற அதே நேரம் அவர்களின் பிள்ளைகள் இங்கு உறவினர் அயலவர், நண்பர்களினால் வன்முறைக்கு உள்ளாவதனைக் காணலாம்.
வீட்டுச் சூழலியல் சார்பான வன்முறைகளால் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொள்பவர்கள் ஆண்களை விட பெண்கள் தான். இவர்கள் வன்முறை இடம் பெற்றாலும் அதனை வெளிப்படுத்துவது மிகவும் குறைவானதாகும். கிராமப் புறப்பெண்கள் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள். இவர்கள் குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் வன்முறையினால் பெண்கள் தற்கொலை விவாகரத்து போன்றவற்றை மேற்கொள்வதினால் அவர்களின் குடும்பம், பிள்ளைகள், பிள்ளைகளினுடைய கல்வி என்பன பாதிக்கப்படுகின்றன. அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாவதனைக் காணலாம்.
பெண்களுக்கெதிரான வன்முறையை தடுக்கும் சட்டங்கள் நாடளாவிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் காணப்பட்ட போதும் அவை பெயரளவினதாக மாத்திரம் மட்டுமேயாகும் .அது நடைமுறையில் சாத்தியப்பாட்டுத்தன்மை குறைவானதாகவே காணப்படுகின்றது. ஏனெனில் சட்டங்களில் காணப்படுகின்ற ஓட்டைகளைப் பயன்படுத்தி
குற்றவாளிகள் தப்பிக்கக் கூடியதான நிலை காணப்படுகின்றது. ஆணாதிக்க சமூகமுறை காணப்படுகின்ற வரை பெண்களுக்கெதிரான வன்முறை இடம் பெற்றுக்கொண்டு தான் இருக்கும்.பெண்ணியல் வாதம் தோற்றம் பெற்றாலும் பெண்களுக்கெதிரான வன்முறை இடம் பெற்ற வண்ணமே இருக்கின்றது.
admin
Dec 06, 2021
0